பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்பில் இருந்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றி வந்த இவருக்குப் பதிலாக, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி செளத்ரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள உளியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன், வழக்கறிஞராகவும் சமூக ஆர்வலராகவும் தனது பயணத்தைத் தொடங்கியவர் ஆவார்.
சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், கோவை மக்கள் சேவை மையம், தாமரை சக்தி மற்றும் புதிய இந்தியா மன்றம் போன்ற அமைப்புகளை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளார். கோவைத் தெற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் மக்கள் பணியாற்றி வரும் வானதி சீனிவாசன், தேசிய அளவில் கட்சியின் மகளிரணியை வழிநடத்திய அனுபவத்தோடு தொடர்ந்து தனது மக்கள் மற்றும் அரசியல் பணிகளை ஆற்றி வருகிறார்.
