“காதல்னா இது தான்!”… ஜெர்மன் பெண்ணை கரம்பிடித்த பஞ்சாபி காதலன்… இணையத்தில் வைரலாகும் திருமண வீடியோ…!!

By Gayathri on ஆவணி 13, 2026

Spread the love

ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங் ஆகியோரின் திருமணம், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள ஒரு குருத்வாராவில் சீக்கிய முறைப்படி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனது துணையின் உணர்வுகளுக்கும் இந்தியக் கலாச்சாரத்திற்கும் மதிப்பளித்து, மருதாணி மற்றும் பாரம்பரிய வளையல்களை அணிந்து முழுமையான பஞ்சாபி மணப்பெண்ணாகவே பியா மாறினார். இரு நாட்டு கலாச்சாரங்களும் சங்கமித்த இந்த திருமண விழாவில், இரு வீட்டாரும் அவர்களது நண்பர்களும் பெருமகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

இந்தத் திருமணத்தின் பின்னணியில் நெஞ்சை உருக்கும் ஒரு குடும்பப் பின்னணி உள்ளது. 1980-களில் ஜெர்மனிக்குச் சென்ற ராபினின் தந்தை ஜகதார் சிங், அங்கேயே ஒரு ஜெர்மன் பெண்ணைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். 2017-ல் அவர் உயிரிழந்த நிலையில், பஞ்சாபில் உள்ள அவரது குடும்பத்தினரால் அவரது திருமணத்தையோ, இறுதிச் சடங்கையோ நேரில் காண முடியாமல் போனது. தனது தாத்தா, பாட்டி மற்றும் அத்தைகளின் பல வருட ஏக்கத்தைப் போக்குவதற்காகவும், மறைந்த தனது தந்தையின் சொந்த மண்ணின் மீதான பாசத்தைக் கௌரவிப்பதற்காகவுமே ராபின் சுமார் 6,000 கிலோமீட்டர் பயணம் செய்து தனது திருமணத்தை சொந்த ஊரில் நடத்தியுள்ளார்.

   

முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், ஜெர்மனியில் இருந்து வந்திருந்த இருவரின் குடும்பத்தினரும் பாரம்பரிய பஞ்சாபி உடைகளை அணிந்து, இந்தியத் திருமணச் சடங்குகளை முழுமையாகக் கொண்டாடினர். குறிப்பாக, இந்தியத் திருமண முறைகள் குறித்து யூடியூப் வீடியோக்கள் வாயிலாக முன்கூட்டியே தெரிந்து கொண்ட பியா, யாருடைய மனதும் புண்படாதவாறு சடங்குகளை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தார். தந்தையின் மீதான அன்பால் எல்லைகளைக் கடந்து நடந்த இந்த நெகிழ்ச்சியான திருமணம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ள நிலையில், இந்த ஜோடி விரைவில் ஜெர்மனியிலும் ஒரு திருமணக் கொண்டாட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.