செல்போன்களில் தொடர்ந்து வரும் தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மக்களவையில் விளக்கமளித்த மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி டாக்டர் பெம்மசானி சந்திரசேகர், AI மூலம் ஸ்பேம் தகவல்களை அனுப்புபவர்களைக் கண்டறிந்து, தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் அவர்களின் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய 4 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் AI அடிப்படையிலான ஸ்பேம் கண்டறியும் அமைப்புகளைச் செயல்படுத்தியுள்ளன. ஒரே நபருடன் தொடர்புடைய 5 அல்லது அதற்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் 10 நாட்களுக்குள் சந்தேகத்திற்குரிய வகையில் ஸ்பேம் தகவல்களை அனுப்பியது AI மூலம் கண்டறியப்பட்டால், அந்த நபரின் வாடிக்கையாளர் விவரங்கள் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்தால் மீண்டும் தீவிரமாகச் சரிபார்க்கப்படும்.
விசாரணையில் ஸ்பேம் தகவல்களை அனுப்பியது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட எண்கள் மற்றும் வசதிகளின் ‘அவுட்கோயிங்’ சேவை உடனடியாகத் துண்டிக்கப்படுவதோடு, அந்த நபர் கருப்புப் பட்டியலிலும் சேர்க்கப்படுவார். ஸ்பேம் அனுப்புவதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை தொடங்கிய முதல் ஒரு வாரத்திலேயே 2 லட்சத்து 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
