மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலம் சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவருக்கும், சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்பவருக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணமான நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பவானிக்கு சைதுல் என்ற கூரியர் பாயுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி இந்த விவகாரம் கணவருக்குத் தெரியவரவே, குடும்ப பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து கூட்டி எச்சரித்துள்ளனர். இதனிடையே, தன் சகோதரரை அழைத்து வர ராஜேஸ்வர ராவ் வெளியில் சென்றபோது, சைதுல் அவரைப் பின்தொடர்ந்து சென்று தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அவரிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்த ராஜேஸ்வர ராவ், மனைவி பவானியின் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளைச் சோதித்தபோது பேரதிர்ச்சி அடைந்தார். அதில், “என் கணவரை எப்படியாவது கொன்றுவிடு.. இல்லையென்றால் நான் செத்துவிடுவேன்” என்று பவானி தன் கள்ளக்காதலனுக்குச் செய்தி அனுப்பியிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. அந்தச் உரையாடல்களைச் ஸ்கிரீன்ஷாட் எடுத்த ராஜேஸ்வர ராவ், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தொடக்கத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் அவர் மீண்டும் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்துவதாக ஊரகக் காவல் ஆய்வாளர் (CI) தற்போது உறுதியளித்துள்ளார்.
