கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த அதிர்ச்சி மரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலையைச் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த அவரது கணவர் ஜெகன் பிரதான் தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், பர்ஷா இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் பல ஆண் நண்பர்களுடன் பழகி வந்ததாகத் தெரிகிறது. மேலும், அவர் தனது ஆண் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராம் வழியாக நிர்வாண வீடியோக்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் ஜெகன் பிரதான், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து இந்த கொடூரக் கொலையைச் செய்துள்ளார்.
கொலையை முடித்துவிட்டு உடலைக் காட்டுப்பகுதியில் வீசிவிட்டு ஜெகன் பிரதான் தலைமறைவானார். அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணின் சிக்னல் மற்றும் அழைப்புகளை வைத்து போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் அவர் வடமாநிலம் ஒன்றில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
