அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தஞ்சாவூர் மாநகர், கிழக்கு, மத்தியம், தெற்கு மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், அண்மைக் காலமாக அதிமுகவினர் மாற்றுப் கட்சிகளுக்கு மாறுவது குறித்தும், கட்சியைப் பலப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதிச் செயலாளர் பத்ம குமரேசன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தார். டி.டி.வி. தினகரனை கட்சியில் இணைத்தால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் பலம் பெறும் என்றும், இதன் மூலம் வரும் காலங்களில் அதிமுக நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் எண்ணத்தை அவர் எடப்பாடியிடம் சுட்டிக்காட்டினார்.
நிர்வாகிகளின் இந்தக் கோரிக்கையை அமைதியாகக் கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, “டி.டி.வி. தினகரன் தற்போது தனியாக ஒரு கட்சியை நடத்தி வருகிறாரே” என்று சுருக்கமாகப் பதில் அளித்துள்ளார். கூட்டம் முடிந்து வெளியே வந்த கும்பகோணம் பகுதிச் செயலாளர் பத்ம குமரேசன் இந்தத் தகவலைச் செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
