வேலுமணி, சண்முகத்திற்கே வேட்டு வச்ச இபிஎஸ்… ஆனா ‘அவருக்கு’ மட்டும் ஸ்பெஷல் சலுகை…. அதிமுகவை உலுக்கும் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ…. லீமா ரோஸ் விவகாரத்தின் ‘அக்மார்க்’ அரசியல் ரகசியம்…!

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை குறித்த விவகாரம் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவளித்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 29 பேரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நீக்கம் செய்துள்ளார். மேலும், தவெகவுக்கு ஆதரவளித்த 25 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடமும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்தபோதும், தவெக அரசை வெளிப்படையாகப் பாராட்டிய திருச்சி லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் மீது மட்டும் கட்சித் தலைமை எந்தவொரு உட்கட்சி நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டுவது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு 2026 சட்டமன்றத் தேர்தலிலேயே மிக அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராகக் களம் கண்டு, லால்குடி தொகுதியில் தவெக வேட்பாளரை வீழ்த்திய லீமா ரோஸ் மார்ட்டின், தற்போதும் அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். நேற்று சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மகளிர் அணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் எவ்வித தடையுமின்றி கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த லீமா ரோஸ், “முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் மிகவும் நன்றாக ஆட்சி நடத்தி வருகிறார்” என்று தவெக அரசைப் பாராட்டியிருந்த நிலையில், அவர் மீது மட்டும் ஒழுங்கு நடவடிக்கை பாயாதது கட்சியின் இரட்டை நிலப்பாட்டையே காட்டுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

   

இந்த முரண்பாடான நடவடிக்கை குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மூத்த நிர்வாகிகளின் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸின் பதவியை மட்டும் இன்னும் பறிக்காததன் பின்னணியில், “அதிமுக யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது… கட்சியின் பொதுச் செயலாளரிடமா, இல்லை லாட்டரி அதிபர் மார்ட்டினிடமா?” என்ற காரசாரமான விவாதங்கள் கிளம்பியுள்ளன. அதிமுகவுக்குள் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு ஒரு விதியும், மற்றவர்களுக்கு ஒரு விதியும் கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற தொண்டர்களின் முணுமுணுப்புகளுக்கு, கட்சித் தலைமைதான் இனி தெளிவான பதிலை அளிக்க வேண்டும்.