மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார். அண்மையில் தனது கட்சி அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், “அரசியல் வேறு, மாநில நிர்வாகம் வேறு; இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், மாநிலத்தின் நன்மைக்காக மத்திய அரசுடன் சுமுகமான உறவைப் பேண வேண்டும்” என அவர் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும், மத்தியில் உள்ள பாஜக அரசுக்கும் இடையே நிலவி வந்த தொடர் மோதல் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய பாதையை முதல்வர் விஜய் தேர்ந்தெடுத்துள்ளார். இதற்கு முன் முந்தைய திமுக அரசு நிதிப் பகிர்வு தொடர்பாக மத்திய அரசுடன் மோதியதும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமர் கூட்டிய கூட்டங்களைப் புறக்கணித்ததும், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் நிர்வாக முடக்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததும் பொதுவெளியில் பெரும் விவாதப் பொருளாயின. ஆனால், முதல்வர் விஜய் டெல்லியுடனான சுமுகமான அதிகாரப்பூர்வ தொடர்பை ஒருபோதும் துண்டிக்காமல், அதை மாநில வளர்ச்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்த விரும்புகிறார்.
இந்த நிர்வாக இணக்கத்திற்காக விஜய் தனது சித்தாந்த நிலைப்பாட்டையோ அல்லது தமிழகத்தின் பாரம்பரியக் கொள்கைகளையோ ஒருபோதும் தளர்த்தவில்லை. இருமொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கைக்கான எதிர்ப்பு, மாநில சுயாட்சி மற்றும் காவிரி நீர் உரிமை போன்ற தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அவர் சமரசமின்றித் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மே மாதம் முதல்வராகப் பதவியேற்றது முதல், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் வாழ்த்துப் பரிமாறியது, டெல்லிக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டு பிரதமரிடமும் நிதியமைச்சரிடமும் தமிழகத்திற்கான விரிவான கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தது எனப் பல ஆக்கப்பூர்வமான நகர்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக, ஜூன் மாதம் நடைபெற்ற நிதி ஆயோக் ஆளுமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய், மத்திய அரசின் முன்னிலையிலேயே தமிழகத்தின் கோரிக்கைகளைத் தைரியமாகப் பதிவு செய்தார். தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதோடு சமக்ர சிக்சா நிதியை இணைக்கும் மத்திய அரசின் முடிவைக் கடுமையாக எதிர்த்த அவர், மாநிலத்திற்கு வரவேண்டிய ரூ. 3,284 கோடி நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரினார். கொள்கையில் சமரசம் செய்யாமல், அதே நேரத்தில் மாநில உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதித் திட்டங்களுக்குக் கூடுதல் மத்திய நிதியுதவியைப் பெற்றுத் தரும் இந்த ‘முரண்பட்டும் உடன்பட்டும்’ செல்லும் அணுகுமுறை, தமிழக அரசியலில் ஒரு புதிய நிர்வாக அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
