சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரு தொகுதிகளில் வென்ற அவர், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக நீடித்து வருகிறார். இதனால், தனது தொகுதி மக்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் முதல்வர் விஜய், பெரம்பூர் மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் ‘மக்கள் சேவைத் தளம்’ என்ற பிரத்யேக மொபைல் செயலியைவிரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், செயலி குறித்த அறிமுக வீடியோவும் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரத்யேக செயலி மூலம் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட மூலக்கடை, கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எந்தவொரு அரசு அலுவலகத்திற்கும் அலையாமல், வீட்டில் இருந்தபடியே தங்கள் புகார்களைப் பதிவு செய்ய முடியும். குறிப்பாக, குடிநீர் தட்டுப்பாடு, பழுதடைந்த சாலைகள், எரியாத தெருவிளக்குகள் போன்ற அடிப்படைப் பிரச்னைகள் முதல் கல்வி, மருத்துவம், மின்சாரம், நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் அவசர உதவிகள் வரை அனைத்து வகையான கோரிக்கைகளையும் இந்த செயலியில் நேரடியாக சமர்ப்பிக்கலாம். பொதுமக்கள் தங்கள் வார்டு வாரியாக உள்ள உள்ளூர் பிரச்னைகளை மிக எளிதாகத் தட்டச்சு செய்து, தங்களின் தேவைகளைத் தொகுதி நிர்வாகத்தின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்ல இந்தத் தளம் வழிவகை செய்கிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரு தளங்களிலும் கிடைக்கவுள்ள இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து, பெயர் மற்றும் மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டுப் பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தலாம். செயலியில் உள்ள ‘புதிய கோரிக்கை’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து, தங்களின் வார்டு எண், தெரு மற்றும் பிரச்னையின் வகையைக் குறிப்பிட்டுப் புகாரைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சில நொடிகளிலேயே, அந்தப் புகார் பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை அடைந்துவிடும். அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் வாட்ஸ்அப் எண்ணிற்குப் புகார் டிக்கெட் எண் (Ticket Number) மற்றும் பிரச்னை தீர்க்கப்படும் தற்காலிகத் தேதியுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த டிக்கெட் எண்ணை வைத்துத் தங்களின் புகாரின் தற்போதைய நிலையைத் தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் நேரடியாகக் கண்காணித்துக் கொள்ளும் வகையில் இந்தச் செயலி அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
