நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி, அவர்களின் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மர்ம நபர்கள் அவசரச் செய்திகளை அனுப்புகிறார்கள். மிக முக்கியமான அல்லது ரகசியமான வணிக ஒப்பந்தம் என்று கூறி, உடனடியாகப் பணப் பரிமாற்றம் செய்யும்படி ஊழியர்களை வற்புறுத்தி ஏமாற்றும் புதிய பாணி மோசடி இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இந்த மோசடிக்காகச் சைபர் குற்றவாளிகள் முதலில் போலி ஒழுங்குமுறை அறிவிப்புகள் அல்லது அவசரக் கோப்புகள் போன்ற தோற்றத்தில் ‘ZIP’ அல்லது ‘RAR’ வடிவிலான ஆபத்தான கோப்புகளை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்புகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அதனைத் திறந்ததும், அவர்களின் கணினியில் வைரஸ் ஊடுருவி, அவர்களின் வாட்ஸ்அப் வெப் அமர்வுகளைத் திருடி, கணக்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்.
இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க, அதிகாரிகள் அல்லது மேலதிகாரிகளிடம் இருந்து வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சலில் வரும் அவசரப் பணப் பரிமாற்றக் கோரிக்கைகளை, நேரடியாகத் தொலைபேசி அழைப்பு அல்லது நேரில் கேட்டு உறுதிப்படுத்தாமல் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையற்ற கோப்புகளைத் திறக்க வேண்டாம் என்றும், வாட்ஸ்அப் வெப் கணக்குகளைத் தொடர்ந்து சரிபார்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏதேனும் பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிலோ அல்லது தேசிய சைபர் குற்றப் போர்ட்டலிலோ புகார் அளிக்க வேண்டும்.
