பெங்களூருவில் உள்ள கேப்கெமினி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில், இரண்டு வயதுக் குழந்தைகள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் அழுவதை நிறுத்துவதற்காக அவர்களை வாஷிங் மெஷினுக்குள் அமர வைத்து தண்ணீரைப் பாய்ச்சுவது மற்றும் கழிவறைகளில் பூட்டி வைப்பது போன்ற நெஞ்சை பதறவைக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திலகேஷ் குமார் கூறுகையில், இந்த காப்பகத்தில் 50 முதல் 60 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நீண்ட நாட்களாகவே இந்த அத்துமீறல்கள் அங்கு அரங்கேறி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த அநீதியைத் தட்டிக்கேட்டு நிர்வாகத்திடம் புகார் அளித்த ஊழியர் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போது ஆதாரங்களுடன் கூடிய வீடியோக்கள் மூலம் குழந்தைகள் உதவி மையத்திற்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஐந்து காப்பக ஊழியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தங்களது ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்குத் தங்களின் முதன்மை முன்னுரிமை என்று தெரிவித்துள்ள கேப்கெமினி நிறுவனம், இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
