அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரெட் ஹூக் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், 10 வயது மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ‘குழந்தைகள் பாதிக்கப்பட்டோர் சட்டத்தின்’ கீழ் நீதிமன்றத் தீர்ப்பை எட்டிய முதல் வழக்காக இது அமைந்துள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட பள்ளியின் இசை ஆசிரியர் ஜான் கிளார்க் தற்போது உயிரிழந்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 18 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்கும்படி நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசை வகுப்பில் திரைப்படம் திரையிடப்பட்ட இருட்டைப் பயன்படுத்தி, ஆசிரியர் ஜான் கிளார்க் அம்மாணவியை வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து 1970-லேயே பள்ளி நிர்வாகத்திற்குப் புகார்கள் சென்றபோதிலும், அவர்கள் ஆசிரியர் மீது எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட மாணவியை மட்டும் இசை வகுப்பிலிருந்து மாற்றிவிட்டு, ஆசிரியரை அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அப்போது பள்ளியைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தியதும், பின்னர் குறைந்தபட்ச குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஆசிரியருக்கு வெறும் 5 ஆண்டுகள் நன்னடத்தை தண்டனை மட்டுமே வழங்கப்பட்டதும் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் முற்றிலும் சீரழித்த இந்தச் சம்பவத்தில், பள்ளி நிர்வாகமும் நகர நிர்வாகமும் குழந்தைகளின் பாதுகாப்பில் மிக மோசமாக அலட்சியம் காட்டியுள்ளதாக நடுவர் மன்றம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், இந்த மாபெரும் இழப்பீட்டுத் தொகையை நியூயார்க் நகர நிர்வாகமே வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. “பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும், குழந்தைப் பருவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெற உரிமையுள்ளவர்கள்” என்று பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் ஜெஃப் ஹெர்மன் குறிப்பிட்டுள்ள நிலையில், நியூயார்க் நகர நிர்வாகம் இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
