கோவை மாநகர அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பமாக, கோவை மாநகர முன்னாள் மாவட்டச் செயலாளர் குறிஞ்சி மணிமாறன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகிய S.ஜெகத்குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவர்களுடன், மதிமுகவைச் சேர்ந்த மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயலாளர் S.சண்முகமும் அதிமுகவில் ஐக்கியமானார். தவெகவில் தங்களுக்குப் போதிய முக்கியத்துவம் கிடைக்காத காரணத்தினாலேயே, அவர்கள் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்கே திரும்பியதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த அடுத்தடுத்த கட்சித் தாவல்கள் கோவை மாவட்ட அதிமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
