விவசாயிகளே… ஜூலை 31 தான் கடைசி நாள்… அதுக்குள்ள இத பண்ணிடுங்க…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love

தமிழகத்தில் இயற்கை சீற்றங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், முதலமைச்சரின் உத்தரவின்படி 2026-2027ஆம் ஆண்டுக்கான ‘பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்’ தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2026 குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் மற்றும் இதர பயிர்களை, உரிய காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் விவசாயிகளுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்திட்டம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில்செயல்படுத்தப்பட உள்ளது.

   

தற்போது தமிழகம் முழுவதும் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் உள்ளிட்ட பயிர்கள் தீவிரமாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை மாநிலம் முழுவதும் சுமார் 9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பருவ பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் மட்டும் பயிரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டில் ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விடக் குறைவாகப் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகள் முன்னெச்சரிக்கையாகக் காப்பீடு செய்வது அவசியமாகிறது.

   

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், பருத்தி, உளுந்து உள்ளிட்ட 14 வேளாண் பயிர்களும், வாழை, மரவள்ளி, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட 12 தோட்டக்கலைப் பயிர்களும் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் குறுவை நெற்பயிருக்குக் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 15, 2026 ஆகும். மற்ற அனைத்து அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களிலும் விவசாயிகள் ஜூலை 31, 2026 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். இந்த இறுதிக்கெடு எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

இத்திட்டத்தின் கீழ் பயிர் செய்ய கடன் பெறும் விவசாயிகள், தங்களின் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகக் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) மூலமாகவோ அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் (National Crop Insurance Portal) நேரடியாகவோ பதிவு செய்யலாம். காப்பீடு செய்யும்போது விண்ணப்பத்துடன் VAO வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் [ஆதார் அட்டை ஓமிட்டெட்] நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டண ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண் அலுவலர்களையோ அணுகலாம்.