அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசிய அவர், பெயரைக் குறிப்பிடாமல் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். அரசியல் அரங்கில் காணாமல் போகும் நிலையில் இருந்த ஒரு கட்சிக்கு 10 சட்டமன்ற இடங்களையும், பல மாவட்டங்களில் கிளைகளே இல்லாத மற்றொரு கட்சிக்கு 8 இடங்களையும் வாரி வழங்கிய திமுக, தங்களை அவமானப்படுத்திவிட்டதாக ஆதங்கப்பட்டார்.
ஒன்பது ஆண்டுகால கூட்டணியில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தொண்டர்களின் காயங்களுக்கு விரைவில் மருந்திடும் வகையில் தன்மானத்தைக் காக்க பொதுக்குழுவில் நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவும், கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது என்று கூறி கூட்டணி முறிவிற்கான தடையை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் விஜய் இன்னும் 6 மாத காலத்திற்குள் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்வார் என்றும், அவரிடம் தெளிவான கருத்து இருக்கிறது என்றும் விஜய்க்கு வைகோ பகிரங்க ஆதரவு அளித்துள்ளார். அதேநேரம், தவெகவுடன் இணைய மதிமுக ரூ.50 கோடி பேரம் பேசியதாக எழுந்த வதந்திகளை மறுத்த வைகோ, தனக்கு பணத்தாசை துளியும் கிடையாது என்றும், கட்சியின் வசந்த காலம் வரப்போகிறது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
