முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனை குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை பணிக்கான டெண்டர்களை ‘சங்கரானந்த் இன்ப்ரா’ என்ற நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒதுக்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய நடத்தப்பட்ட இந்த ரெய்டுகளின் போது, முறைகேடுகளை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ₹20 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஊழல் புகார் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அடுத்தகட்ட தீவிர விசாரணை தொடரும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
