அதிகப்படியான வியர்வை, பொடுகுத் தொல்லை, தலையில் சேரும் அழுக்கு மற்றும் வறண்ட சருமம் ஆகியவை தலை அரிப்பிற்கு முக்கியக் காரணங்களாகும். அரிப்பு தாங்க முடியாமல் நகங்களால் தலையைத் தேய்த்து சொறியும்போது, அங்குள்ள மென்மையான சருமம் பாதிக்கப்பட்டு புண்கள் மற்றும் எரிச்சல் ஏற்படுகின்றன. இது தவிர, ரசாயனங்கள் கலந்த வீரியமிக்க ஷாம்பூக்களைப் பயன்படுத்துவதாலும், ‘செபோரிக் டெர்மடிடிஸ்’ போன்ற பூஞ்சை தொற்றுகளாலும் இந்தத் தொந்தரவு தீவிரமடைகிறது.
இந்த பிரச்சனைக்கு வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களே சிறந்த தீர்வாக அமைகின்றன. வேப்பிலை மற்றும் கசகசாவை அரைத்து தலையில் தடவி ஊறவைத்து குளிப்பதன் மூலம் தலையில் உள்ள கிருமிகள் மற்றும் பூஞ்சைத் தொற்றுகள் அழியும். மேலும், கற்றாழை ஜெல்லுடன் சில துளிகள் டீ ட்ரீ ஆயில் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், தலைச்சருமம் குளிர்ச்சியடைந்து அரிப்பு உடனடியாகக் கட்டுப்படும்; புண்களும் விரைவில் ஆறும்.
தலையை எப்போதும் சுத்தமாகவும் ஈாரப்பதத்துடனும் வைத்திருப்பது மிகவும் அவசியம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மென்மையான மூலிகை ஷாம்பூக்களைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும். குளித்த பிறகு ஈரமான கூந்தலை அப்படியே கட்டாமல் நன்றாக உலர வைக்க வேண்டும்; இல்லையெனில் காளான் தொற்று ஏற்படும். எக்காரணம் கொண்டும் மற்றவர்களின் சீப்பு, துண்டு போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது. இந்த எளிய பராமரிப்புகளைப் பின்பற்றினாலே அரிப்பு நீங்கி தலைச்சருமம் ஆரோக்கியமாக மாறும்.
