டெல்லியில் கடந்த ஜூன் 8ஆம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நடைமுறைகள் திமுகவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. இதன் எதிரொலியாகவே, டெல்லியில் காங்கிரஸ் குறித்த பழைய விமர்சனங்களை பேனராக அச்சடித்து திமுக தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. ராகுல் காாந்தியின் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததும், அதற்கு ராகுல் காந்தி நன்றி கூறி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அடித்தளமிட்டதும் கூட்டணிக்குள் இருந்த விரிசலை சற்றே குறைப்பது போலத் தோன்றியது.
இதனைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதைத் பார்த்து, இரு கட்சிகளுக்கு இடையேயான “பஞ்சாயத்து” முடிந்துவிட்டது என காங்கிரஸ் நிம்மதி பெருமூச்சு விட்டது. வழக்கம்போல் தங்களது அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தலாம் என்று காங்கிரஸ் திட்டமிட்ட வேளையில்தான், அடுத்த அதிரடியைக் கிளப்பியுள்ளது திமுக. ஜூன் 8 கூட்டத்தின் முடிவின்படி, தேர்தல் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பத் தயாராக இருக்கும் முக்கியமான கடிதத்தில் திமுக இன்னும் கையெழுத்திடாமல் தவிர்த்து வருகிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற அனைத்து முக்கியக் கட்சிகளும் இந்தக் கடிதத்தில் தங்களது கையெழுத்தைப் பதிவு செய்துவிட்ட நிலையில், திமுகவின் கையெழுத்துக்காக டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைவர்களை காங்கிரஸ் அணுகியுள்ளது. ஆனால், திமுக தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் எதுவும் வராமல் இழுபறி நீடித்து வருகிறது. அடுத்த வாரத்திற்குள் இந்தக் கடிதத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், திமுகவின் இந்த மௌனமும் பிடிவாதமும் காங்கிரஸ் தலைமைக்கு கடுமையான டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஐந்தாவது பெரிய கட்சியாக விளங்கும் திமுகவின் கையெழுத்து இல்லாமல் இந்தக் கடிதத்தை சமர்ப்பித்தால், அது எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிவிடும் என காங்கிரஸ் அஞ்சுகிறது. மேலும், இந்தச் சூழலை பாஜக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பரிகாசம் செய்யக்கூடும் என்பதால், எப்படியாவது திமுகவைச் சமாதானப்படுத்தி கடிதத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று ராகுல் காந்தி தீவிரமாக ஆலோசித்து வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
