“தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அடித்தது பம்பர் லாட்டரி”… முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…. தமிழக அரசின் அந்த ‘ரூ.12.67 கோடி’ ரகசியம்…!

By Nanthini on ஆனி 23, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான தினசரி உணவுப்படி, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான நிதியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று வரும் சுமார் 2,600 மாணவ, மாணவியர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதற்காக தினசரி உணவுப்படி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ. 350 உணவுப்படியானது, இனி ரூ. 450 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றத்தால், இதற்கான மொத்த செலவினத் தொகை ரூ. 29.12 கோடியிலிருந்து ரூ. 37.44 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் உணவுக்காக மட்டும் கூடுதலாக ரூ. 8.32 கோடி நிதியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

   

உணவுப்படியைத் தொடர்ந்து மாணவர்களின் தூய்மை மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் சீருடைகளுக்கான தொகையும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சீருடைத் தொகை ரூ. 6,000-த்திலிருந்து ரூ. 15,000 ஆகவும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான தொகை ரூ. 10,000-த்திலிருந்து ரூ. 25,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னதாக ஒதுக்கப்பட்ட ரூ. 1.70 கோடி நிதியானது, தற்போது ரூ. 4.25 கோடியாக உயர்த்தப்பட்டு, கூடுதலாக ரூ. 2.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது விளையாட்டு வீரர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

   

இவற்றுடன் விளையாட்டு வீரர்களின் தனிநபர் திறனை சர்வதேச அளவுக்கு மேம்படுத்த ஏதுவாக, பிரத்யேக விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான நிதியும் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க வழங்கப்பட்ட ரூ. 2,000 இனி ரூ. 10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ. 1.80 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, மொத்த செலவினம் ரூ. 80 லட்சத்திலிருந்து ரூ. 2.60 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த மூன்று பிரிவுகளின் கீழ் ரூ. 12.67 கோடி கூடுதல் நிதியை வழங்கி, தமிழக விளையாட்டுத் துறையில் புதியதொரு உத்வேகத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.