நொய்டாவின் கௌர் சிட்டி 2 குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பவானா கவுர் என்ற பெண், அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு தம்பதியினரால் இரும்பு மற்றும் மரத்தடிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடர்பான தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சம்பவத்தின் போது தான் நாய்களுக்கு உணவளிக்கவில்லை என்று பவானா கூறிய போதிலும், அந்தத் தம்பதியினர் அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் முழுமையான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதில் பவானா உடல் முழுவதும் பலத்த காயமடைந்ததுடன், மருத்துவப் பரிசோதனையில் அவரது விரல் மற்றும் எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. விலங்கு நல ஆர்வலரான ரேணு கவுர் இந்த வீடியோ மற்றும் காயமடைந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து, குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
https://www.instagram.com/reel/DZ11ShiuEg6/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
சம்பவம் நடந்த உடனே பவானா பிஸ்ராக் காவல் நிலையத்தை (Bisrakh Police Station) அணுகியபோது, காவல்துறையினர் இதனை குடியிருப்புவாசிகளுக்கு இடையேயான சாதாரணப் பிரச்சனை என்று கூறி, ஆரம்பத்தில் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். அதன்பின்னர், ரேணு கவுர் மற்றும் பல விலங்கு நல ஆர்வலர்கள் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, அது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமாக மாறியதை அடுத்து தாக்குதல் நடத்திய தம்பதியினர் மீது காவல்துறையினர் இறுதியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
