தமிழ் திரையுலகில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் “சித்தப்பு” என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சரவணன், 1990-களின் தொடக்கத்தில் முன்னணி கதாநாயகனாகத் தனது கலைப்பயணத்தைத் தொடங்கினார். வைதேகி கல்யாணம், பொண்டாட்டி ராஜ்ஜியம் போன்ற குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவர், ஒரு இடைவெளிக்குப் பிறகு அமீரின் பருத்திவீரன் படத்தில் நடித்த மாபெரும் குணச்சித்திரக் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த மறுபிரவேசம் செய்தார். அதனைத் தொடர்ந்து பருந்து, அலெக்ஸ் பாண்டியன், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் முரட்டுத்தனமான மற்றும் எதார்த்தமான கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்துத் தனி முத்திரை பதித்த இவர், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழிலும் போட்டியாளராகப் பங்கேற்று பரவலான கவனத்தைப் பெற்றார்.
இவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2003-ல் சூர்யஸ்ரீ என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சரவணன், அவரிடமிருந்து விவாகரத்து பெறாமலேயே 2019-ல் ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தற்போது மவுலிவாக்கத்தில் உள்ள ஒரே அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு வீட்டில் இரண்டாவது மனைவியுடனும், அதன் எதிர்வீட்டில் முதல் மனைவியுடனும் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சரவணன் தன்னைத் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து ஜீவனாம்ச வழக்கில் தீர்ப்பும் பெற்றிருந்த முதல் மனைவி சூர்யஸ்ரீ, தற்போது மீண்டும் ஒரு புதிய புகாரை அளித்துள்ளார். அதாவது, “தன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை சரவணன் ஆட்களை வைத்து அகற்றிவிட்டார் என்றும், தன் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை” என்றும் கூறி மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
