கிரேட்டர்வின் தாத்ரி பகுதியில் உள்ள ஈஸ்டர்ன் பெரிஃபரல் எக்ஸ்பிரஸ்வேயில் பிராந்திய போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்புவதற்காக, அதிக பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள் சிலர் தங்களது லாரிகளில் இருந்த பெரிய அளவிலான பாறாங்கற்களை நடுரோட்டிலேயே கொட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிவேகமாக வாகனங்கள் செல்லும் இந்த எக்ஸ்பிரஸ்வேயில் திடீரென பாறைகள் கொட்டப்பட்டதால், அந்த வழியே வந்த பல வாகனங்கள் பாறைகளின் மீது ஏறி விபத்துக்குள்ளாகின. இதில் டஜன் கணக்கான வாகனங்களின் டயர்கள் வெடித்து பஞ்சராகின. இதனால் கொளுத்தும் வெயிலில் பயணிகள் பல மணி நேரம் நடுரோட்டில் தவித்து நின்றனர், மேலும் நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சாலையில் கிடந்த பாறைகளை உடனடியாக அகற்றினர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ பஞ்சர் ஒட்டும் இயந்திரங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்த ஆபத்தான செயலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
