இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாக ஒரு தனிப் பெண்ணாக மிகவும் பயந்திருந்ததாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனிநபர் பயணி பேஜ் தெரிவித்துள்ளார். ஆனால், இங்கு வந்த பிறகு தனக்குக் கிடைத்த அன்பும், பாசமும் தான் கற்பனை செய்து கூட பார்க்காத ஒன்று என்று அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த அன்பின் காரணமாகவே தனக்கு இந்தியா மிகவும் பிடித்துவிட்டதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DZpOB0LBNMp/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
இந்தியாவில் தனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான சில அனுபவங்களையும் அவர் விவரித்துள்ளார். டெல்லிக்கு நள்ளிரவில் வந்திறங்கியபோது, வண்டி செல்ல முடியாத இடத்திற்குத் தனது ஹோட்டல் இருந்ததால், டாக்ஸி ஓட்டுநர் காரைப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, அவரை ஹோட்டல் வாசல் வரை நடந்து வந்து பத்திரமாக விட்டுச் சென்றதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். அதேபோல, மருந்துக்கடையில் சில்லறை இல்லாதபோது கடைக்காரர் இலவசமாக சானிடைசர் கொடுத்ததையும், வழி தெரியாமல் தவித்தபோது ஒரு பெண்மணி ரயில் நிலையம் வரை வந்து வழிகாட்டியதையும், மழையில் சிக்கியபோது உணவக ஊழியர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் லிஃப்ட் கொடுத்ததையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
வெளிநாட்டுப் பயணி ஒருவர் இந்தியாவின் பெருமையைப் பாராட்டிப் பேசிய இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “அதிதி தேவோ பவ” (விருந்தினர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள்) என்ற இந்தியப் பண்பாட்டை இந்த நிகழ்வுகள் பிரதிபலிப்பதாக இணையவாசிகள் பலரும் பெருமிதத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
