தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்த அவர், தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக இந்த விலகல் முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தனை ஆண்டுகள் கட்சிக்காகத் தான் ஆற்றிய பணிகள் அனைத்தும் தனது வாழ்நாளின் மிகப்பெரிய பொக்கிஷம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் .
தனது இந்த நீண்டகால அரசியல் பயணத்தில் தனக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து, தன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததற்காகத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை அவர் ஜி.கே.வாசனுக்கு அனுப்பியுள்ளார் . இச்செய்தி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
