தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தவெக அமைச்சரவையில் நீடிப்பது குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளையும் வீழ்த்தி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதோடு, திமுக கூட்டணியிலும் விரிசல் விழுந்துள்ளது. இந்தச் சூழலில் காங்கிரஸ், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையில் பங்கெடுத்துள்ளன. எனினும், கூட்டணி குறித்து திருமாவளவன் தொடர்ந்து முரண்பட்ட கருத்துகளைக் கூறி வருவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அவரது புதிய நேர்காணல் தவெகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய திருமாவளவன், தவெகவிற்கு ஆதரவு அளித்ததும், அமைச்சரவையில் இடம்பெற்றதும் அரசியல் ரீதியான ஒரு வெகுமதிதான் என்று குறிப்பிட்டுள்ளார். விசிகவின் இந்த முடிவைப் பார்த்து சிலர் விமர்சிப்பதற்கும், சிரிப்பதற்கும் பதிலடி கொடுத்துள்ள அவர், “நாங்கள் ஏன் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இடதுசாரிகள் வெளியே இருந்து ஆதரவளிப்பதைப் போல, தாங்களும் அமைச்சரவையில் இருந்துகொண்டே தவெக அரசிடமிருந்து ஒரு குறிப்பிட்ட இடைவெளியைப் பேண முடியும் என்றும், தவெகவிற்கு இருக்கும் சந்தேகங்களைப் போக்குவதற்காகவே தற்காலிகமாக அமைச்சரவையில் இணைந்துள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்டதால் மட்டுமே தாங்கள் தவெகவுடன் நிரந்தரக் கூட்டணியில் இருப்பதாக அர்த்தமில்லை என்று கூறிய திருமாவளவன், “விசிக – தவெக கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக உருவாகவில்லை” என்பதை வெளிப்படையாகப் போட்டு உடைத்துள்ளார். எந்த நேரத்திலும் தவெக அரசு தங்களுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறலாம் என்ற சூழல் நிலவுவதால், தாங்களும் எந்தக் கணத்திலும் அமைச்சரவையில் இருந்து வெளியேறத் தயாராகவே இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். அமைச்சரவையில் இணைந்திருந்தாலும் தங்களால் விலகியிருக்க முடியும் என்றும், இப்படியும் ஒரு புதுவிதமான அரசியலை விசிகவால் செய்ய முடியும் என்றும் அவர் அதிரடியாகக் கூறியிருப்பது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
