பாஜகவை அலறவிட்ட ‘சிங்கம்’… அண்ணாமலை டீமுக்கு டெல்லி வைத்த செக்… அமித்ஷா போட்ட மாஸ்டர் பிளான்?… தமிழக பாஜகவில் அடுத்து நடக்கப்போகும் ட்விஸ்ட்….!

By Nanthini on ஆனி 13, 2026

Spread the love

தமிழக பாஜகவில் அடுத்தகட்ட மாற்றங்களுக்கான அறிகுறிகள் தீவிரமாகத் தென்படத் தொடங்கியுள்ளன. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக பாஜகவை முழுமையாக மறுசீரமைக்க தேசிய தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனதும், தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பிரசாரம் மேற்கொண்ட போதிலும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்ததும் கட்சிக்குள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து தேசிய தலைமை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

   

இந்தச் சூழலில், அண்ணாமலையின் விலகல் தமிழக பாஜகவுக்கு கூடுதல் சவாலாக மாறியுள்ளது. அவருடன் நெருக்கமாக செயல்பட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினரின் எதிர்கால நிலைப்பாடு குறித்தும், மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வெளியேறியதைத் தொடர்ந்து மேலும் விலகல்கள் ஏற்படக்கூடாது என்பதில் டெல்லி தலைமை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நிதின் நபின், தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோர் தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்களுடன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

   

மாநில நிர்வாக அமைப்பை புதுப்பிப்பது மற்றும் புதிய தலைமுறையினரை முன்னிலைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய மாநிலத் தலைவர் பதவிக்காக தற்போது மூன்று பெயர்கள் பலமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மாநில துணைத் தலைவர்கள் மா. வெங்கடேசன், பேராசிரியர் ப. கனகசபாபதி மற்றும் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் இதில் அடங்கும். குறிப்பாக, அமைப்பு ரீதியான அனுபவம் மற்றும் தேசிய தலைமையுடனான நெருக்கம் காரணமாக பேராசிரியர் ராம சீனிவாசனின் பெயர் இந்த ரேசில் முன்னணியில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அதேபோல், தமிழக பாஜகவின் மிக முக்கியப் பொறுப்பான மாநில அமைப்புச் செயலாளர் பதவிக்கு, அனுபவமிக்க நிர்வாகியான கே.டி. ராகவனின் பெயர் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத் தலைவர்கள், மண்டல நிர்வாகிகள் மட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தவும், இளைஞர்களைத் தக்கவைக்கவும் அமித் ஷா முன்னெடுக்கும் இந்த அதிரடி மறுசீரமைப்பு நடவடிக்கைகள், தமிழக அரசியல் களத்தில் பாஜகவின் எதிர்காலப் பயணத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.