தமிழக அரசின் மெகா ஜாக்பாட்!.. ₹30 லட்சம் வரை வாரி வழங்கும் அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?.. இதோ முழுவிபரம்..!!

By Muthu Mani on ஆனி 9, 2026

Spread the love

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கல்விக்கடன் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கான ‘விராசாத்’ கடனுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினைக் கலைஞர்கள் தங்களுக்குத் தேவையான உபகரணங்கள், கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்காகக் குறைந்த வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சியர்கள் மற்றும் சமணர்கள் ஆகிய சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இக்கடனுதவித் திட்டங்கள் பயனாளிகளின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகச் செயல்படுத்தப்படுகின்றன. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்கு மிகாமலும், திட்டம் 2-ன் கீழ் ஆண்டு வருமானம் ரூ.8,00,000 வரையிலும் இருக்க வேண்டும். இதில் கைவினைக் கலைஞர்களுக்கான தனிநபர் கடனுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% என்ற மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், வணிகக் கடன்களுக்கு திட்டம் 1-ன் கீழ் 6% வட்டியிலும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டியிலும் கடனுதவி அளிக்கப்படுகிறது. இதுதவிர, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்குத் திட்டம் 1-ன் கீழ் 3% வட்டியிலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8%, மாணவிகளுக்கு 5% வட்டியிலும் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

   

இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சிறுபான்மையினர் மதச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை இருப்பிடச் சான்றிதழ், அடையாளச் சான்று மற்றும் திட்ட அறிக்கை ரூ.5 லட்சத்திற்கு மேல் கடன் பெற விரும்பினால் ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் இவற்றுடன் கல்வி நிறுவனத்தின் அசல் போனாஃபைட் சான்றிதழ், கட்டண ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.