இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் (Rupert Lowe) பேசிய உரையின் போது, அங்குள்ள தனிப்பட்ட கும்பல்களால் வெள்ளையினச் சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் திட்டமிட்டுப் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்துத் தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்ட அவர், பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களைச் சுட்டிக்காட்டி இது வெறும் பாலியல் அத்துமீறல் மட்டுமல்ல, இனம் சார்ந்த ஒரு கொடூரத் தாக்குதல் (Racially motivated grooming gangs) என்று நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மனிதநேயமற்ற பல்வேறு கொடுமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. அதில், கர்ப்பிணியாக இருந்த ஓர் இளம்பெண் சுமார் 600 முதல் 700 வெவ்வேறு ஆண்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரமும், ஒரு குழந்தையின் முகத்தில் சிகரெட்டால் சுட்டுக் கொடுமைப்படுத்திய சம்பவமும் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 அல்லது 13 வயதேயான ஒரு சிறுமியின் பிறப்புறுப்பில் மதுபான பாட்டிலின் பகுதியை நுழைத்துக் வன்கொடுமை செய்ததும், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பல போலீஸ் அதிகாரிகளாலேயே ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் அம்பலமாகியுள்ளது. மற்றொரு டீன்-ஏஜ் சிறுமியின் வாக்குமூலத்தின்படி, வேன் ஒன்றில் இருந்த நாய் கூண்டுகளுக்குள் 15 முதல் 20 வெள்ளையினச் சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களின் கிறிஸ்தவ மத நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில், “உன்னுடைய கடவுள் எங்கே? உனக்காக கடவுள் வருவாரா?” எனக் கேட்டு வதைத்துள்ளனர். இங்கிலாந்தில் கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்தே இத்தகைய அராஜகங்கள் முதன்முறையாக வெளியே தெரியத் தொடங்கின. குறிப்பாகப் பாகிஸ்தான் பாரம்பரியத்தைக் கொண்ட ஆண்கள் கும்பலாக இணைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய திட்டமிட்ட பாலியல் சுரண்டல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டில் சவுத் யார்க்ஷைர் பகுதிக்கு உட்பட்ட ரோதர்ஹாம் (Rotherham) நகரில் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட பல சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பாக 5 ஆண்களுக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட சிறுமிகளும் தன்னார்வலர்களும் பலமுறை புகார் அளித்தும் கூட, இங்கிலாந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பல வழக்குகளில் பல ஆண்டுகளாக எந்தவொரு முறையான விசாரணையும் நடத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளனர் என்ற கசப்பான உண்மையும் தற்போது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
