ஆதவ் அர்ஜுனா சொன்னது பலித்தது… விஜய் முன்னிலையில் கொத்து கொத்தாக இணையும் ‘3 மாஜி அமைச்சர்கள், 9 எம்.எல்.ஏக்கள்’… பனையூரில் இன்று நடக்கும் அந்த ‘பிரம்மாண்ட’ சம்பவம்….!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், தொடர் தேர்தல் தோல்விகளுமே இந்த பிரம்மாண்ட வெளியேற்றத்திற்குக் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். “அதிமுகவின் 90 சதவீத தொண்டர்களும் நிர்வாகிகளும் தவெகவை நோக்கி வரத் தீர்மானித்துவிட்டனர்” என்று அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் குறிப்பிட்டிருந்ததை உண்மையாக்கும் விதமாகவே தற்போதைய நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.

   

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில் இன்று பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக வலம் வந்த 3 முக்கியப் புள்ளிகள் தங்களின் ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, முன்னாள் வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் கைத்தறித் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகிய மூவரும் இன்று அதிகாரப்பூர்வமாகத் தங்களை இணைத்துக் கொள்ள உள்ளனர்.

   

முன்னாள் அமைச்சர்கள் மட்டுமன்றி, கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவின் வலுவான 9 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் (Ex-MLAs) இன்று தவெகவில் இணைய உள்ளனர். தருமபுரி மேற்கு மாவட்ட தவெக நிர்வாகி சிவன் தலைமையில், பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, சேலம் சங்ககிரி சுந்தரராஜ், சேலம் வீரப்பாண்டி ராஜமுத்து ஆகியோர் கொங்கு மண்டலத்திலிருந்தும்; விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ், சாத்தூர் ராஜவர்மன் ஆகியோர் தென் மாவட்டங்களிலிருந்தும்; வட தமிழகத்தில் திருவண்ணாமலை கலசப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 9 பேர் தவெகவின் கொடியைத் தங்களின் சட்டையில் குத்திக் கொள்ளத் தயாராகிவிட்டனர்.

 

சில நாட்களுக்கு முன்புதான் திருச்சி முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் ஜெயங்கொண்டம் முன்னாள் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் ஆகியோர் தவெகவில் இணைந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று மேலும் 12 முக்கியப் புள்ளிகள் தங்களை இணைத்துக் கொள்ளும் இந்த அதிரடி நகர்வு, அந்தந்த மாவட்டங்களில் அதிமுகவின் அடித்தளத்தைப் பலவீனமாக்கும் என்றும், அதே வேளையில் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பலத்தை மாபெரும் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் அரசியல் விமர்சகர்கள் ஆணித்தரமாகக் கணிக்கின்றனர்.