“விஜய் கட்சி எம்.எல்.ஏ ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தாரா..? சொந்தக் கட்சி வேட்பாளரே போட்ட வெடிகுண்டு… அலறும் தவெக…!”

By Swetha on ஆனி 6, 2026

Spread the love

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ லட்சுமணன், தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு தலா 2,000 ரூபாய் பணம் கொடுத்துத்தான் வெற்றி பெற்றார் என அதே கட்சியைச் சேர்ந்த ஓமலூர் தொகுதி தவெக வேட்பாளர் அதியமான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஓமலூர் தொகுதி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், லட்சுமணன் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததே தனது தொகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வரை தங்களை விட்டுச் செல்லக் காரணமாக அமைந்தது என்று பேசியுள்ளார். தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் பெருமிதத்துடன் கூறி வரும் நிலையில், சொந்தக் கட்சி வேட்பாளரே இத்தகைய குற்றச்சாட்டைப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ளது.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனிடம் நேரில் கேள்வி எழுப்ப முயன்றனர். அப்போது, அங்கிருந்த தவெக நிர்வாகிகள் செய்தியாளர்களைக் கேள்வி கேட்க விடாமல் தடுத்து, அவர்களை அப்புறப்படுத்தும் நோக்கில் தள்ளிவிட்டதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், காரின் பின்புற சீட்டில் அமர்ந்திருந்தவரின் சைகையின்படி, எம்.எல்.ஏ லட்சுமணன் தனது காரை எடுத்துக்கொண்டு உடனடியாக அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

   

செய்தியாளர்களை தவெக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி தள்ளிவிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த செய்தியாளர்களுக்கும் தவெகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தவெக வேட்பாளரின் பண விநியோகக் குற்றச்சாட்டுக்கு ஜனநாயக முறைப்படி பதிலளிப்பதற்குப் பதிலாக, உண்மையை மூடிமறைக்கும் நோக்கில் ஊடகங்களின் கேள்விகளைத் தடுத்து நிறுத்தி, செய்தியாளர்களிடம் தவெகவினர் அநாகரிகமாக நடந்துகொண்ட இந்தச் சம்பவத்திற்கு தற்போது பல்வேறு தரப்பிலிருந்தும் பலத்த கண்டனங்கள் எழுந்து வருகின்றன.