ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான சத்தம் கேட்டுள்ளது. சந்தேகமடைந்து அவர்கள் கழிவறைக்குள் சென்று பார்த்தபோது, அங்குள்ள வெஸ்டர்ன் டாய்லெட் கமோடிற்குள் ஏதோ ஒரு உயிரினம் இருப்பது தெரியவந்தது. அதை ஒரு பாம்பு என்று தவறாகப் புரிந்துகொண்ட குடும்பத்தினர், பயந்துபோய் உடனடியாக கழிவறை கதவை மூடிவிட்டு, பாம்புகளைப் பிடிக்கும் நபருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் பணியாளர் கமோடைச் சோதித்துப் பார்த்தபோது, அது பாம்பு அல்ல, மாறாக ஒரு பெரிய உடும்பு என்பது தெரியவந்தது. மிகவும் குறுகலான அந்த கமோட் பகுதிக்குள் உடும்பு சிக்கியிருந்ததால், அதை வெளியே எடுப்பது மீட்புப் பணியாளருக்கு பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும், சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த உடும்பை அவர் பத்திரமாக மீட்டெடுத்தார். அதன் பின்னரே குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பொதுவாக உடும்புகள் 5 முதல் 6 அடி நீளம் வரை வளரக்கூடியவை. இவை மனிதர்களைத் தாக்குவதில்லை என்றாலும், தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்தால் மட்டுமே தாக்கும் குணம் கொண்டவை, மேலும் இவை விஷத்தன்மை அற்றவை என்று வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் உடும்புகளை வேட்டையாடுவதோ அல்லது கடத்துவதோ வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும் என்பதால், மீட்கப்பட்ட அந்த உடும்பு பாதுகாப்பாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
