தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்ற நாளில் இருந்து, அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இந்த நிலையில், திருச்சியில் அக்கட்சியின் தீவிரத் தொண்டர் ஒருவர், தனது வீட்டுப் பூஜை அறையிலேயே தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு முழு உருவச் சிலை ஒன்றை அமைத்து, அதற்குத் தினமும் கற்பூர ஆராதனை காட்டி, தீவிரமாகப் பூஜை செய்து வரும் வினோத சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சுகுமார் என்ற இந்தத் தொண்டர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராகவும், விஜய் மக்கள் இயக்கத்தின் அடிமட்டத் தொண்டனாகவும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். விஜய் முறைப்படி அரசியல் கட்சித் தொடங்கிய பின்னர், தன்னை முழுமையாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டு தீவிரமாகக் களப்பணியாற்றி வந்த சுகுமார், தற்போது விஜய் முதலமைச்சரானதால் தனது வீட்டில் இந்தச் சிலையை நிறுவி வழிபாடு நடத்தி வருகிறார்.
இது குறித்து தவெக தொண்டர் சுகுமார் பேசுகையில், “விஜய் அவர்கள் முறைப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சரான பிறகுதான் மக்கள் அனைவரும் அவரைப் பரவலாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். ஆனால், நான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகவே அவரின் தீவிர ரசிகனாக இருந்து வருவதால், ஓராண்டுக்கு முன்பே இந்த விஜய் சிலையைச் செய்து எனது வீட்டில் வைத்துத் தொடர்ந்து வழிபட்டு வருகிறேன்” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திருவெறும்பூர் தொகுதியின் தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட நவல்பட்டு விஜயகுமார் என்பவர், இதே போன்ற ஒரு விஜய் உருவச்சிலையைத்தான் தனது முக்கியத் தேர்தல் பிரச்சார வாகனத்தில் வைத்துத் தொகுதி முழுவதும் வாக்குச் சேகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாகக் கடவுள் எப்படித் தன்னை நாடி வரும் மக்களுக்கு அத்தனை நன்மைகளையும் செய்கிறாரோ, அதேபோல் தான் தமிழகத்தின் புதிய முதல்வரான விஜய்யும் ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் அத்தனை நன்மைகளையும் செய்ய வேண்டும், கண்டிப்பாகச் செய்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் இந்தச் சிலையை வணங்கி வருவதாக சுகுமார் கூறியுள்ளார்.
