திருச்சியில் தோழி வீட்டுக்குச் சென்ற 14 வயது சிறுமிக்கு கார் ஓட்டுநர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கீரைக்கடை பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது தோழியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, தோழியின் தாயார் வெளியூர் செல்வதற்காக வாடகை கார் ஒன்றை வரவழைத்திருந்தார். அந்த காரை ஓட்டி வந்த மாரிசெல்வன் (43) என்ற ஓட்டுநர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அச்சிறுமியிடம் நயமாகப் பேசி, தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுமி கீரைக்கடை பகுதியில் மது போதையில் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சிறுமியிடம் விசாரித்தபோது கார் ஓட்டுநரின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குற்றம் சாட்டப்பட்ட கார் ஓட்டுநர் மாரிசெல்வனைப் பிடித்து சரமாரியாகத் தாக்கி, உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாரிசெல்வன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவத்தை அறிந்து மருத்துவமனையில் குவிந்த சிறுமியின் உறவினர்களும் பொதுமக்களும், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
