நெல்லை மாவட்டம் பேட்டை ஆர்.பி. சன்னதி தெருவைச் சேர்ந்த முகமது அசரப் அலி (26) என்பவர், அப்பகுதியில் உள்ள அம்மா உணவகம் எதிரே ஆன்லைன் சேவை மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று இவரது கடைக்கு, பேட்டை நாராயணசாமி கோவில் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் ஆதார் அட்டை நகல் (ஜெராக்ஸ்) எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அசரப் அலி, அந்த இளம்பெண்ணுக்குத் தெரியாமல் அவரது செல்போனில் புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோ எடுத்துள்ளார். இதைத் தற்செயலாகக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், உடனடியாகத் தனது கணவருக்குத் தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்துள்ளார்.
அங்கு விரைந்து வந்த இளம்பெண்ணின் கணவர், அசரப் அலியிடம் இதுகுறித்துத் தட்டிக் கேட்டுள்ளார். முதலில் மறுத்த அசரப் அலி, அவர் காவல் துறைக்குப் புகார் அளிக்க முயன்றதால் பயந்துபோய் அங்கிருந்து தப்பியோடினார். அவசரத்தில் அவர் விட்டுச் சென்ற செல்போனைத் தம்பதியினர் கைப்பற்றினர். பின்னர், அந்த போனுடன் பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த கொடூரம் குறித்துத் தம்பதியினர் முறைப்படி புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.
போலீசார் அசரப் அலியின் செல்போனைத் திறந்து சோதனை செய்தபோது, அதில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகின. அந்த போனில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவாகி இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஆன்லைன் சேவை மையத்தின் எதிரே பேருந்து நிறுத்தம் உள்ளதால், அங்கு பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்களைத் தொலைவில் இருந்தவாறே அவர்களுக்குத் தெரியாமல் தவறான எண்ணத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அவர் சேமித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து, பிறர் அறியாமல் அந்தரங்கத்தை நோட்டமிடுதல் மற்றும் படம் பிடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 77) பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் வேல் சவுத்ரி தலைமையிலான குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தலைமறைவாக இருந்த முகமது அசரப் அலியை இன்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய, அவரது கடையில் இருந்த கணினி மற்றும் இதர மின்னணு சாதனங்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
