விஜய் கொடுத்த ‘அந்த ஒரு ‘ நம்பிக்கை… பாஜகவுக்கு ‘குட்பை’ சொல்லும் அண்ணாமலை..? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

By Soundarya on ஆனி 3, 2026

Spread the love

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், அமைப்பு செயலாளர் சந்தோஷ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்த அண்ணாமலை, தனக்கென்று தனிப்பாதையை உருவாக்க விரும்புவதாகவும், தனக்கு வழங்கப்பட்ட மாநிலத் தலைவர் பதவிக்கு நன்றி என்றும் கூறி விடைபெற அனுமதி கோரியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அண்ணாமலை எடுத்துள்ள இந்த முடிவு டெல்லி மேலிடத்திற்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் ‘என் மண்.. என் மக்கள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தீவிரப் பயணம் மேற்கொண்டு பாஜகவை வளர்ப்பதில் அண்ணாமலை முக்கியப் பங்காற்றினார். இருப்பினும், கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டாத அண்ணாமலையைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பாஜக மேலிடம், அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரனை அந்தப் பொறுப்பில் அமர்த்தியது. தனது உழைப்பிற்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததாலும், மேலிடத்தின் இந்தத் திடீர் நடவடிக்கையாலும் கடும் விரக்தியடைந்த அண்ணாமலை, தற்போது பாஜகவை விட்டு வெளியேறி சொந்தமாகப் புதிய கட்சி தொடங்கும் முடிவில் தீவிரமாக உள்ளார்.

   

அண்ணாமலையின் இந்தத் திடீர் அரசியல் மாற்றத்திற்குப் பின்னணியில், தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் கொடுத்த மிகப்பெரிய நம்பிக்கைதான் காரணமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து வந்தன. ஒருகாலத்தில் பலமாக இருந்த காங்கிரஸ் கட்சியால் கூட மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழ்நிலை நிலவியது. ஆனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தவெக மூலம் 60 ஆண்டுகாலத் தமிழக திராவிட அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

   

விஜய்யின் இந்த அசாத்திய அரசியல் வெற்றிதான், அண்ணாமலைக்குத் தனியாகக் களம் இறங்குவதற்கான பெரும் ஊக்கத்தையும் தைரியத்தையும் கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய பாதையைத் தமிழ்நாட்டில் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில், அண்ணாமலை பாஜகவிற்கு ‘குட்பை’ சொல்லிவிட்டுத் தனி கட்சித் தொடங்கும் முடிவை எடுத்துள்ளார். தற்போது பாஜக மேலிடத் தலைவர்கள் அண்ணாமலையைச் சமாதானம் செய்ய தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வரும் வேளையில், அண்ணாமலை தன் முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.