தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி சொந்தமாகப் புதிய அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், அண்ணாமலை டெல்லிக்குச் சென்று அமித்ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை நேரில் சந்தித்துத் தனது விலகல் முடிவைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கட்சியை வளர்க்கத் தான் கடுமையாக உழைத்த போதிலும், தேர்தல் நேரத்தில் தன்னைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த மேலிடத்தின் நடவடிக்கையால் விரக்தியடைந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்ணாமலையின் இந்தத் திடீர் அரசியல் மாற்றத்திற்குப் பின்னணியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய் கொடுத்த நம்பிக்கைதான் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 1967-ஆம் ஆண்டு முதல் சுமார் 60 ஆண்டுகாலத் தமிழக அரசியல் வரலாற்றில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வந்தன. இந்த நீண்ட கால வரலாற்றை, கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மாற்றி அமைத்து, முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து விஜய் சாதனை படைத்துள்ளார். விஜய்யின் இந்த அசுர வளர்ச்சிதான் அண்ணாமலையைத் தனிப்பாதை நோக்கிச் சிந்திக்க வைத்துள்ளது.
விஜய்யின் தவெக பெற்றுள்ள வெற்றியானது, தமிழக அரசியலில் பணபலமோ அல்லது சாதிப்பலமோ இல்லாமல் கூட மக்களிடம் செல்வாக்கு இருந்தால் தேர்தலில் வெல்ல முடியும் என்ற மாபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட பல சாதாரண இளைஞர்கள் திராவிடக் கட்சிகளின் பலத்தை முறியடித்து வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் தமிழக மக்கள் தற்போதைய சூழலில் அரசியல் மாற்றத்தை தீவிரமாக விரும்புகிறார்கள் என்பதும், அதற்குரிய சரியான தலைவர்களை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதும் அண்ணாமலைக்குத் தெளிவாகப் புரிந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
விஜய்யின் இந்த அதிரடி அரசியலையே தனக்கான ‘இன்ஸ்பிரேஷன்’ ஆக எடுத்துக்கொண்டுள்ள அண்ணாமலை, வரும் 2031-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து இப்போதிருந்தே காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் மாற்றத்தை விரும்பி தவெக-வில் இணைய நினைத்து, அங்கு வாய்ப்பு கிடைக்காத பல முக்கியப் பிரமுகர்களையும், இளைஞர்களையும் ஒருங்கிணைத்துத் தன் பக்கம் இழுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் தீவிரமாகக் களப்பணியாற்றி, திராவிட மற்றும் தவெக கட்சிகளுக்கு மாற்றாகத் தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுக்க முடியும் என்று அண்ணாமலை நம்புகிறார்.
