தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தனுஷ் மற்றும் பிரபல இயக்குனர் செல்வராகவன் ஆகியோரின் தந்தையும், மூத்த இயக்குனருமான கஸ்தூரி ராஜா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆணவக் கொலைகளுக்கு முக்கியக் காரணம் காதல்தான் என்று குறிப்பிட்ட அவர், “படிக்கச் சென்றால் படியுங்கள், வேலைக்குச் சென்றால் வேலையைப் பாருங்கள்; காதல் செய்யாதீர்கள்” என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், பிள்ளைகளுக்கு எப்போது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோருக்குத் தெரியும் என்பதால், படிக்கும் வயதில் காதலில் விழ வேண்டாம் என்றும் அவர் பேசியுள்ளார்.
கஸ்தூரி ராஜாவின் இந்த பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சாதியக் கட்டமைப்பும், பிற்போக்குத்தனமான சிந்தனைகளுமே ஆணவக் கொலைகளுக்கு முதன்மைக் காரணம் என்று சுட்டிக்காட்டும் பலரும், அதை விடுத்து காதலைக் குற்றஞ்சாட்டுவது தற்செயலானது அல்ல என்று விமர்சித்து வருகின்றனர். வன்முறையை நியாயப்படுத்துவது போல் அவரது பேச்சு அமைந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை இவ்வளவு பெரிய பேசுபொருளாக மாறியதற்கு மிக முக்கியக் காரணம், அவரது சொந்தக் குடும்ப பின்னணிதான். கஸ்தூரி ராஜாவின் மகன்களான தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவருமே காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “சொந்த மகன்கள் காதலித்தபோது வராத ஞானம், அடுத்த வீட்டுப் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறும்போது மட்டும் வருகிறதா?” என்றும், “சொந்தக் குடும்பத்திற்கொரு நீதி, சமூகத்திற்கொரு நீதியா?” என்றும் நெட்டிசன்கள் அவரது இரட்டை நிலைப்பாட்டைச் சாடி காரசாரமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
