ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை எழுத்தர் , தன் சக பெண் ஊழியர் ஒருவரை காதலிப்பதாகக் கூறி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த பெண் அவரது காதல் விருப்பத்தை நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், அந்தப் பெண்ணின் மீது கொண்ட கோபத்தால் அலுவலகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார்.
இந்த ரகசிய கேமராவை ஆன்லைனில் வாங்கிய சஞ்சய், யூடியூப் மூலம் அதை எவ்வாறு கையாள்வது என்று கற்றுக்கொண்டுள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பெண்கள் கழிவறையில் அதை ரகசியமாகப் பொருத்தி, அங்கு பதிவாகும் காட்சிகளைத் தனது மொபைல் போன் மூலம் பார்த்து வந்துள்ளார். மேலும், அந்த கேமராவின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக வாரம் ஒருமுறை அதை எடுத்து, மீண்டும் கழிவறையிலேயே ரகசியமாகப் பொருத்தி இந்த அதிர்ச்சிகரமான செயலைத் தொடர்ந்து செய்துள்ளார்.
பெண் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் தீர்த்தோல் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி சஞ்சய்யை கைது செய்தனர். அவரிடமிருந்து ரகசிய கேமரா, மொபைல் போன், பென் டிரைவ் மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் மாவட்ட நிர்வாகம் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்தது. மேலும், அவர் பதிவு செய்த வீடியோக்களை வேறு யாருக்கும் பகிர்ந்தாரா என்பது குறித்து அறிய பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
