ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் பிரபல விரைவு வர்த்தக தளமான ‘பிளிங்கிட்’ செயலி மூலம் பெண்களுக்கு தேவையான சில தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களை (Personal Care Products) ஆர்டர் செய்துள்ளார். அந்தப் பார்சலை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்த டெலிவரி ஊழியர், அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொண்டவுடன் தவறான எண்ணத்துடன் அநாகரீகமாக நடந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்.
பார்சலை ஒப்படைக்கும் போது, “இந்த பாக்கெட்டுக்குள் என்ன இருக்கிறது?” என்று அந்த ஊழியர் அநாகரீகமாகக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அந்தப் பெண், அவனைக் கடுமையாக எச்சரித்துவிட்டு பார்சலை வாங்கிக்கொண்டு கதவை மூடியுள்ளார். ஆனால், அங்கிருந்து சென்ற சில நொடிகளிலேயே அந்த டெலிவரி ஊழியர் பெண்ணின் மொபைல் போனுக்கு அழைத்து, மிகவும் ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி அநாகரீகமான கோரிக்கையை விடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் மனரீதியாகப் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.
இந்தக் கொடூரமான சம்பவம் குறித்து அந்தப் பெண் உடனடியாக பிளிங்கிட் நிறுவனத்திடம் புகார் அளித்தார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அந்நிறுவனம், சம்பந்தப்பட்ட டெலிவரி ஊழியரை உடனடியாக வேலையை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், அந்த ஊழியரிடம் தங்களது வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண் இருப்பதால், அவனால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்ற அச்சத்தில் அப்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் இன்னும் உறைந்து போயுள்ளனர். இச்சம்பவம் ஆன்லைன் டெலிவரி தளங்களில் வாடிக்கையாளர்களின், குறிப்பாகப் பெண்களின் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
