“அப்பாவைக் கொலை செய்வேன்” சொன்னபடியே செய்த 18 வயது மகன்… ஆன்லைனில் கத்தி வாங்கி நள்ளிரவில் வாயை பொத்தி… ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட பகீர் பின்னணி…!!

By Soundarya on ஆனி 1, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகே உள்ள ஸ்ரீராம்புரா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராம் சிங் சௌதரி, தனது முதல் மனைவி சுனிதாவின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 2019-ல் சூர்யா என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்தார். மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான இரண்டாவது மனைவி சூர்யா, ராம் சிங்கின் தாயார் மற்றும் முதல் மனைவி, பிள்ளைகள் என அனைவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று ராம் சிங், அவரது இரண்டாவது மனைவி, தாயார் மற்றும் உறவினர் மகிமா ஆகிய நான்கு பேரும் காரோடு எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதில் மூன்று பெண்களின் உடல்களும் காருக்குள் கருகிய நிலையிலும், ராம் சிங்கின் உடல் மட்டும் காரில் இருந்து சற்று தள்ளி கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இக்கொடூரக் கொலை குறித்து போலீஸார் ராம் சிங்கின் வீட்டிற்குச் சென்று முதல் மனைவி சுனிதாவிடம் விசாரித்தபோது, கணவர் தனது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறி மழுப்பினார். ஆனால், சுனிதாவின் பதற்றமான நடத்தையால் சந்தேகமடைந்த போலீஸார் வீட்டைச் சோதனை செய்தபோது, சுவர்களில் ரத்தக்கறைகள் படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ராம் சிங்கின் மகனைத் தனியாக அழைத்துச் சென்று போலீஸார் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தியபோது, குடும்பத்திற்குள் மறைந்திருந்த பல பகீர் உண்மைகளும், கொலையின் பின்னணியும் அம்பலமாகின.

   

ராம் சிங் தனது முதல் மனைவி சுனிதாவை வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யும்படி வற்புறுத்தி, வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட தனது மகன் மற்றும் மகளையும் அவர் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தந்தையின் இந்தத் தொடர் அராஜகத்தால் ஆத்திரமடைந்த மகன், “ஒரு நாள் அப்பாவைக் கொலை செய்வேன்” என்று தனது தாயாரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு, ஆன்லைன் மூலம் ஒரு கத்தியையும் வாங்கி வீட்டில் ரகசியமாக மறைத்து வைத்துள்ளார்.

   

சம்பவத்தன்று இரவு, வழக்கம் போல் சுனிதாவிற்கும் ராம் சிங்கிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தலையிட்ட மகன், தந்தைக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் நள்ளிரவில் ராம் சிங் தூங்கிய பிறகு, தான் ஆன்லைனில் வாங்கி வைத்திருந்த கத்தியை எடுத்த மகன், தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் வாயைப் பொத்தி கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.