அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர்ச் சூழலால், உலகளாவிய பெட்ரோலியப் பொருட்களின் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, உலக நாடுகள் பலவற்றிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் பாதிப்பு கடுமையாக எதிரொலித்து, எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவில் பெரும்பகுதி இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கப்பல்களில் கொண்டு வரப்படுகிறது. தற்போதைய ஆபத்தான சூழ்நிலையில், இந்தியாவிற்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுடன் அங்கு காத்துக்கிடக்கின்றன. அபாயகரமான இப்பகுதி வழியாக சில இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அவை எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்ற விவரங்களை அதிகாரிகள் ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்த நெருக்கடிக்கு நடுவே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மறுபுறம், மத்திய கப்பல் துறை அமைச்சகம் இந்திய கடற்படையுடன் இணைந்து ஒரு சிறப்பு ‘வார் ரூம்’ (War Room) அமைத்து, இப்பகுதி வழியே வரும் இந்தியக் கப்பல்களை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. மேலும், தாக்குதல்களில் இருந்து தப்பித்து பாதுகாப்பாக இந்தியா வந்து சேர, கப்பல் கேப்டன்களுக்கு இந்த வார் ரூம் மூலம் தொடர்ந்து ஆலோசனைகளும், மாற்று வழிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
