வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

By Swetha on வைகாசி 28, 2026

Spread the love

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு முக்கிய கோரிக்கைகளையும், சில விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது. கடந்த ஆட்சியில் “டாப்ஸ்” (TOPS) திட்டத்தைப் பாராட்டிவிட்டு, இப்போது தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகப் புதிய முதல்வரிடம் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கோருபவர்களை “நேற்று தீ வைத்தவன் இன்று தண்ணீர் குடம் தூக்கி ஓடுவது” போன்ற நாடகமாடுபவர்கள் என்று சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. இத்தகைய “முகமூடி மனிதர்களை” முதல்வர் கவனமாக அடையாளம் காண வேண்டும் என்றும், ஊழியர்களின் நம்பிக்கையை விற்றவர்களின் வார்த்தைகளை மட்டும் நம்பி அரசு முடிவெடுக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

தாங்கள் எந்த ஆட்சியிலும் அதிகாரத்திற்குத் தலைகுனியாமல், ஊழியர்களின் உரிமைகளுக்காக உண்மையாகப் போராடி வருவதாக இச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட “டாப்ஸ்” திட்டம் ஊழியர் விரோதத் திட்டம் என முதன்முதலில் எச்சரித்தது தங்களது அமைப்பே என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், புதிய முதல்வர் பொறுப்பேற்றவுடன் வாழ்த்து தெரிவித்து, தங்களது கோரிக்கைகளைப் பேச நேரில் சந்திக்க நேரம் கோரியும் இதுவரை தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றும், மாறாகக் குறிப்பிட்ட சில அமைப்புகளுக்கு மட்டும் சந்திப்பு வழங்கப்பட்டிருப்பது அரசு ஊழியர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

   

ஜூன் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள மாநில செயற்குழு கூட்டத்தில், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் நிலுவைக் கோரிக்கைகள் குறித்து விரிவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசிற்கு அனுப்பப்படும் என்று சங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசு தூய்மையான, வெளிப்படையான ஆட்சியை வழங்க முழு ஒத்துழைப்புத் தரத் தயாராக இருக்கும் அதே வேளையில், தேர்தல் காலத்தில் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், தங்களின் உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கி ஜனநாயக அறவழிப் போராட்டங்களைச் சமரசமின்றி முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தங்களது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.