பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும், ‘வீரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவருமான நடிகர் பாலா, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பச் சிக்கல்கள் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பாடகி அமிர்தா உடனான விவாகரத்துக்குப் பிறகு, கடந்த 2024-ஆம் ஆண்டு கோகிலா என்பவரை அவர் மறுமணம் செய்து கொண்டார். எனினும், அவரைச் சுற்றித் தொடரும் சட்டப் போராட்டங்கள், வழக்குகள் மற்றும் சர்ச்சைகள் அவரது மன அமைதியை முழுமையாகப் பாதித்துள்ளன.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் தனது புதிய வீடியோ பதிவில் பாலா மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். தான் திருமணமான நாள் முதற்கொண்டு பல இக்கட்டான விஷயங்களை வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து வாழ்ந்து வருவதாகவும், தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது இந்த உலகத்தில் சட்டம் என்று ஒன்று இருக்கிறதா என்றே சந்தேகம் எழுவதாகவும் அவர் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இனிமேலும் யாராவது தன்னைப்பற்றி அவதூறாகப் பேசினால் சும்மா இருக்கப் போவதில்லை என்றும், அனைத்து உண்மைகளையும் ஆதாரங்களுடன் வெளியில் கொண்டு வரப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஒருவேளை அந்த உண்மைகள் வெளிவரக் கூடாது என்று நினைத்தால், யாராவது தங்களுக்கு விஷம் வைத்துக் கொன்று விடுங்கள் என்று தன் மனைவியுடன் சேர்ந்து பாலா வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
