மோசடி செய்த கணவன்… நிதி அள்ளிக் கொடுத்த பொதுமக்கள்..! மருத்துவக் கொள்கையையே மாற்றிய ஒரு ஏழைக் கணவனின் உருக்கமான போராட்டம்..!

By Swetha on வைகாசி 27, 2026

Spread the love

சீனாவின் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த லியாவோ டான் மற்றும் அவரது மனைவி டூ ஜின்லிங் ஆகியோர் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். திடீரென வேலை இழந்ததால் வறுமையில் வாடிய இவர்களின் வாழ்வில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஒரு பேரிடி விழுந்தது. டூ ஜின்லிங்கிற்கு ‘யுரேமியா’ (Uremia) என்ற கடுமையான சிறுநீரக நோய் இருப்பது கண்டறியப்பட்டது. வாரத்திற்கு மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை செய்யாவிட்டால் அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறினர். இதற்கான மாதச் செலவு 70,000 ரூபாய்க்கும் மேல் இருந்ததால், லியாவோ தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் இழந்தார். உள்ளூர் வசிப்பிட அட்டை இல்லாததால் அரசாங்க மருத்துவ உதவியும் கிடைக்காமல் போனதால், மனைவியைக் காப்பாற்ற வேறு வழியின்றி தவித்தார்.

ஒருநாள் மருத்துவமனையில் பணம் செலுத்தும்போது, அங்குள்ள ஊழியர்கள் ரசீதில் உள்ள முத்திரையை மட்டுமே பார்க்கிறார்கள், கணினியில் சரிபார்ப்பதில்லை என்பதை லியாவோ கவனித்தார். தனது கண்முன்னே மனைவி இறப்பதை சகித்துக்கொள்ள முடியாத அவர், மருத்துவமனையின் போலி முத்திரையைத் தயாரித்து, போலி ரசீதுகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் தனது மனைவிக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார். 2011-ஆம் ஆண்டு மருத்துவமனை தனது கணினி அமைப்பைப் புதுப்பித்தபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. லியாவோ சுமார் 24.22 லட்சம் ரூபாய் மதிப்பிலான 49 போலி ரசீதுகளைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

   

நீதிமன்றத்தில் லியாவோ, “நான் என் மனைவியை உயிரோடு பார்க்க மட்டுமே விரும்பினேன், எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கண்ணீருடன் கூறினார். இந்த உருக்கமான கதை ஊடகங்களில் பரவியதும், சீன மக்கள் நெகிழ்ந்துபோய் அவருக்கு உதவ முன்வந்து 5 லட்சம் யுவானுக்கும் மேல் நிதி திரட்டினர். அந்தப் பணத்தைக் கொண்டு லியாவோ மருத்துவமனையின் கடனை அடைத்தார். லியாவோவின் சூழ்நிலையைப் புரிந்துகொண்ட நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு அவருக்கு சிறைத் தண்டனை வழங்காமல், வீட்டிலிருந்தே மனைவியைக் கவனித்துக் கொள்ள அனுமதித்தது. எனினும், 2016-இல் அவரது மனைவி பல உறுப்புகள் செயலிழப்பால் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஏழை மக்களின் நலனுக்காகச் சீனா தனது மருத்துவக் கொள்கைகளில் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.