தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியில், அதிமுகவின் 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளும், முதலமைச்சர் விஜய் ஏற்கனவே ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் காலியாகி, தற்போது இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளன.
இந்த 5 தொகுதிகளின் கடந்த கால தேர்தல் வரலாற்றைப் பார்க்கும்போது தாராபுரத்தைத் தவிர மற்ற 4 தொகுதிகளிலும் அதிமுகவே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பெருந்துறை தொகுதியில் கடந்த 2001 முதலே திமுக ஒருமுறை கூட வெல்லவில்லை; மதுராந்தகம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளும் அதிமுகவின் கோட்டையாகவே திகழ்ந்துள்ளன. திருச்சி கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் விஜய் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்திருந்தார். இந்த வரலாற்றுத் தரவுகளின்படி, இந்தத் தொகுதிகள் எதுவும் திமுகவிற்கு பெரிய அளவில் சாதகமாக இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.
இருப்பினும், பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே வெற்றி பெறும் என்ற எழுதப்படாத விதியின்படி, தவெக தனது பலத்தை 107-லிருந்து 112 ஆக உயர்த்த தீவிரமாக உழைத்து வருகிறது. அதேநேரத்தில், பொதுத்தேர்தலில் பெற்ற தோல்விக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக இந்த இடைத்தேர்தலில் பதிலடி கொடுத்து மீண்டும் கம்பேக் கொடுக்க விரும்புகிறது. இதனால் ராஜினாமா செய்தது அதிமுக எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், இந்த ஐந்து தொகுதிகளிலும் தவெக மற்றும் திமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
