பிரான்சில் 42 வயதான லேடிசியா ஆர் என்ற நான்கு குழந்தைகளின் தாய், தனது முன்னாள் காதலனும் வங்கி மேலாளருமான கியோம் புக்கி என்பவரால் கடந்த 2015 முதல் 2022 வரை ஏழு ஆண்டுகளாகக் கொடூரமான பாலியல் மற்றும் மனரீதியான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமான பாலியல் செயல்கள் என்று நம்ப வைக்கப்பட்டவை, நாளடைவில் தீவிரமான வன்முறையாக மாறியுள்ளன. காதலனை விட்டுப் பிரிந்தால் தங்களின் அந்தரங்க வீடியோக்களை பொதுவெளியில் வெளியிட்டு விடுவார் என்ற மிரட்டலால், அந்தப் பெண் நீண்ட காலம் மௌனமாகச் சித்ரவதைகளைச் சகித்துக் கொண்டுள்ளார்.
காதலன் புக்கி, லேடிசியாவைத் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அறிமுகமில்லாத அந்நியர்களுக்குப் பாலியல் ரீதியாக விற்பனை செய்துள்ளார். நெடுஞ்சாலை பெட்ரோல் பங்க் போன்ற பொது இடங்களில் அந்நியர்களுடன் உறவு கொள்ள வற்புறுத்தியதுடன், தான் யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்பதை புக்கியே தீர்மானித்ததாக லேடிசியா தெரிவித்துள்ளார். இவ்வாறு சுமார் 487 ஆண்களுடன் தான் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள வைக்கப்பட்டதாகவும், இந்தச் சித்ரவதைகளால் தற்போது பெரும் உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் உருக்கமாகக் கூறியுள்ளார்.
குற்றவாளியான கியோம் புக்கி, இவை அனைத்தும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் நடந்த ‘பாலியல் விளையாட்டு’ என்று நீதிமன்றத்தில் வாதிட்ட போதிலும், அரசு தரப்பு அவருக்கு ஆயுள் தண்டனை கோரியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்ததுடன், தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு முடிந்த பிறகே பரோல் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. பிரான்சில் தனது கணவராலேயே மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அந்நியர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட ஜிசெல் பெலிக்கோட் வழக்கின் தீர்ப்பு தந்த தைரியத்தினாலேயே, லேடிசியா தற்போது இந்தத் துயரத்தை வெளிப்படையாகப் பேச முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
