தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகிய மூவரும் சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் தங்களது பதவி விலகல் கடிதங்களை நேரில் வழங்கினர். இந்த திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் மொத்த எண்ணிக்கை 47-லிருந்து 44 ஆகக் குறைந்துள்ளது.
சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கிய கையோடு, இந்த மூன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க-வில் எற்பட்ட உட்கட்சிப் பூசல்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அதிருப்தி காரணமாக, வேலுமணி ஆதரவு வட்டாரத்தைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்த பின்னர், ராஜினாமா செய்த மூன்று முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களும் அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், தற்போது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-விலிருந்து மக்கள் பிரதிநிதிகள் த.வெ.க-வை நோக்கி வரத் தொடங்கியிருப்பது அக்கட்சியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளதுடன், தமிழக அரசியலில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
