கனடாவிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள தனிமை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தானாகவே முன்வந்து மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ‘சுதர்சன்’ என அடையாளம் காணப்பட்ட சென்னையைச் சேர்ந்த அந்த இளைஞர், தான் கனடாவை விட்டு வெளியேறி இந்தியா திரும்பியதற்கான உணர்வுப்பூர்வமான காரணங்களை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அவர், “நான் சுயமாகவே இந்தியாவுக்குத் திரும்பிவிட்டேன். நம்மிடம் இருக்கும் பணத்தைச் செலவழிப்பதற்கு நம்முடன் யாரும் இல்லை என்றால், அந்தப் பணத்தால் என்ன பயன்? கனடா ஒரு மன அழுத்தத்தைத் தரும் நாடு. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் இப்போதுதான் உண்மையாகப் புன்னகைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “அடுத்து யார் வரப்போகிறீர்கள்?” என்ற கேள்வியுடன் இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/reel/DYkp7aFT6-p/?utm_source=ig_web_copy_link
இவ்வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர் அவரது முடிவை ஆதரித்து, அந்நிய நாட்டில் அனுபவிக்கும் தனிமை, கடுமையான குளிர் மற்றும் குடும்பப் பிரிவு போன்ற மனரீதியான போராட்டங்களை விட மன அமைதியே முக்கியம் என்று கூறியுள்ளனர். அதேவேளையில், மற்றொரு தரப்பினர் வெளிநாட்டில் குடியேறும்போது ஆரம்பக் காலத்தில் இத்தகைய சவால்கள் இயல்பானவை என்றும், பொறுமையும் உழைப்பும் இருந்தால் மட்டுமே அங்கு சாதிக்க முடியும் என்றும் தங்களது மாற்று கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
