கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். பதறிப்போன பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை, பள்ளபாளையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரை அருகே சிறுமி கொடூரமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த அதிர்ச்சி மரணம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி உறவினர்கள் சூலூர் காவல் நிலையம் முன்பு விடிய விடிய 8 மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், சிறுமிக்கு ஏற்கனவே அறிமுகமான பக்கத்து வீட்டு இளைஞரான கார்த்திக் என்பவர், சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியைத் தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கார்த்திக்குக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இந்த கொடூரக் கொலைக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் என்ற மற்றொரு இளைஞரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மோகன்ராஜ், தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் போலீசார் தன்னைச் சிக்க வைத்துள்ளதாகவும் கூச்சலிட்டார்.
இச்சம்பவத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே முழுமையான உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார். விளையாடச் சென்ற 10 வயது சிறுமி சாக்லேட் ஆசை காட்டி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூரம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது.
