சமூக ஊடகங்களில் இயங்கும் சில இளைஞர்களைக் ‘கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் அண்மையில் ஒரு வழக்கு விசாரணையின் போது விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், நீதிபதியின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே அபிஜித் திப்கே என்பவர் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (கரப்பான் பூச்சி மக்கள் கட்சி) என்ற பெயரில் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடங்கினார். பின்னர் நீதிபதி சூர்ய காந்த், தான் போலியான பட்டப் படிப்புகளைப் பெற்றவர்களைக் குறித்தே அவ்வாறு பேசியதாக விளக்கம் அளித்திருந்தாலும், அதற்குள் இந்த அமைப்பு நெட்டிசன்களிடையே அசுர வேகத்தில் பரவத் தொடங்கிவிட்டது.
இந்தியாவின் முன்னணி தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றை விடவும், இந்த ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மிகக் குறுகிய காலத்தில் 2 கோடிக்கும் அதிகமான Gen Z இளைஞர்கள் பின்தொடரத் தொடங்கினர். சமகாலச் சமூகப் பிரச்சினைகள் மற்றும் இளைஞர்களின் குரலாக இந்த அமைப்பு உருவெடுத்ததால், ஒட்டுமொத்த இந்திய நெட்டிசன்களின் பேராதரவைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் தவிர்க்க முடியாத ஒரு பெரும் சக்தியாக இது குறுகிய காலத்தில் உருவெடுத்தது.
இளைஞர்களின் பலத்த ஆதரவோடு இயங்கி வந்த இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) கணக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவில் திடீரென முடக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது 2 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட இவர்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமும் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது இணையவாசிகள் மத்தியில் தற்போது மீண்டும் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
